நாகரீகத்தில் உன்னத நிலையில் இருந்தவைகளாகக் கருதப்பட்ட அரசர்களின் பொற்காலத்தில் கூட அசிங்கமான அரசியல் அற்புதமாக நடந்திருக்கிறது. மக்களாட்சி, சமத்துவம் ஆட்சி செய்வதாகச் சொல்லப்படும் இந்தக் காலத்திலும் இதுவே தொடர்கிறது. பெயர்கள், குணங்கள் மட்டும் தான் மாறியிருக்கின்றன. மனிதன் மனிதன் தானே! இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் அல்லவா?
ராபர் க்ரீன் அந்தக் காலத்து அரசவையைப் போல இந்தக் காலத்திலும் அலுவலகங்கள், குடும்பங்கள், அமைப்புகள், சமுதாயம், அரசு போன்ற சூழல்களில் கீழ்க்கண்ட ஐடியாக்களை முயற்சி செய்து பார்க்கச் சொல்கிறார்:
- மறைமுகமாக செயல்படுதல், கவர்ச்சி, இனிமை, ஏமாற்றுதல், எதிர்ப்பவர்களை வஞ்சகமாகவும் மறைமுகமாகவும் வெற்றி கொள்ளுதல்.
- எந்த பவரும் இல்லாமல் பலவீனமாக இருப்பது ஒரு தியாகம் அல்லது நல்ல குணம் என்று காட்டிக்கொள்வது.
- வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சமத்துவம் வேண்டும் என்று போராடுவது.
- நூல் பிடித்தது போல நேர்மையாக நடந்த்து கொள்வது. சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருக்கும் போது நேர்மையாக இருப்பதுவே ஒரு பலத்தைக் கொடுக்கும்.
- எதுவுமே தெரியாத அப்பாவி போல இருந்த்து கொள்வது. ஆனால் தங்களை அப்பாவிகளாகக் காட்டிக் கொண்டு நடிப்பவர்கள் கண்டிப்பாக “அடப்பாவி” என்று சொல்லுமளவில் தான் இருப்பார்.
இந்த டெக்னிக்குகளை நம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ சிறுவயதில் இருந்த்து கடைபிடித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இவை எல்லாவற்றிலும் முக்கியமான, பெரும் சிறப்புக் குணம் என்பது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மேலாண்மை செய்வது தான். உணர்ச்சிகள் மேகம் போல,புகை போல உண்மையை மறைத்துவிடும்.
அன்பு கூட பெரும் அழிவாக மாறிவிடும் என்கிறார் ராபர்ட் க்ரீன். ஏனென்றால் நம்பி, அன்பு செய்யும் ஒருவர் துரோகம் செய்யும் போது, எதிர்பாராத விதத்தில் உங்கள் பவர் பிடுங்கப்பட்டு பரிதாபராக மாறிவிடுவீர்கள் நீங்கள்.
ஆனால் இயேசுவின் போதனைகளில் இவற்றுக்கு நேர்மாறான சில விதிகளைக் காண்கிறோம்:ட்
- உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையாக இருக்கிறது என்று சொல்லியிருக்கின்றார்.
- எளிமையானவர்கள், நீதியுள்ளவர்கள், பலக்கீனமானவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. அவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ்ந்து காட்டினார். வாழக் கற்றுக் கொடுக்கிறார்.
- உரிமைகள், சொத்துக்கள் என்பவைகள் எல்லாவற்றையும், சுயத்தையும் கூட விட்டுக் கொடுக்காமல் அவரது சீடனாக முடியாது என்கிறார். அவரது சீடர்களைத் தன் நண்பர்கள் என்ற பவரஃபுல்லான நிலையில் வைத்திருக்கிறார்.
- நம்மை நேர்மையாக இருக்கச் சொல்லும் கடவுள் நாம் பலகீனமானவர்கள் என்பதையும் அறிந்திருக்கிறார். அவரே ஒரு மனிதனாக வந்ததால் அவருக்கு நம் நிலை நன்றாகவே தெரியும். ஆனால் அச்சச்சோ சொல்வது மட்டுமல்லாமல், பலவீனத்தில் வெற்றி பெற உதவி செய்பவராகவும் இன்றும் நம்முடன், நமக்குள் இருக்கிறார்.
- பலவீனத்தைப் பவராக மாற்றிக் கொடுப்பவர் அவர் என்றாலும், நாம் நம் பலவீனத்தை ஒரு பெரிய சாதனையாக, நல்ல குணமாகக் காட்டிக்கொண்டு சீன் கொடுத்தால் நாம் ஒரு மாய்மாலக் காரர்களாகத் தான் இருப்போம்.
- சிறு பிள்ளைகளைப் போல மாறும்படி நமக்குச் சொல்லும் இயேசு தான், புறாக்களைப் போல கபடம் இல்லாதவர்களாகவும் பாம்புகளைப் போல புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார். நரியைப் போலவோ, பூனையைப் போலவோ நடிக்கச் சொல்லவில்லை. இது அவருடைய போதனைகளைப் பின்பற்றி அவர் உதவியுடன் நடக்கும் போது மட்டுமே சாத்தியம்.
இதை நடைமுறைப்படுத்தி, போராடி அனுபவித்த ஒருவர் சொல்கிறார்:
எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். (2 கொரிந்தியர் 12:7-10).
எனக்கு என்னவோ, இந்தக் காலத்தில் பவருக்காக அல்ல, பலவீனத்துக்காக, பலவீனத்தில் நிமிர்ந்து நிற்கும் பவருக்காகத் தான் நாம் ஜெபிக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.